Saturday, February 25, 2012

makkal maruthuvam: Selvin Dhas posted on your Wall"By மருத்துவர் தெ....

makkal maruthuvam:
Selvin Dhas posted on your Wall"By மருத்துவர் தெ....
: Selvin Dhas posted on your Wall "By மருத்துவர் தெ. வேலாயுதம் 24 Feb 2012 01:55:53 AM IST "சித்த'ம் இறங்காதா...? உலகம் தமிழர்களைத் ...


Selvin Dhas posted on your Wall
"By மருத்துவர் தெ. வேலாயுதம்
24 Feb 2012 01:55:53 AM IST

"சித்த'ம் இறங்காதா...?
உலகம் தமிழர்களைத் தலைநிமிர்ந்து பார்ப்பதற்கான பல்வேறு அம்சங்களில் முக்கியமான ஒன்று சித்த மருத்துவமாகும். "நலம்' என்பது விரிவான விளக்கம் கொண்டதாகும். "மருத்துவம்' என்பது அதனுள் அடங்கியுள்ள ஒரு கூறாகும். ஆனால், இன்றைக்கு மருத்துவத்துறையோ நலத்துறையாகவே பார்க்கப்படுகிறது. இது சரியான கண்ணோட்டம் அன்று.
நாட்டுக்கு அணிகலன் பூட்ட நினைத்த வள்ளுவப்பேராசான், முதலாவதாக அணிவிப்பது "பிணியின்மை'. வருமுன் காத்தல்தான் நாட்டுக்கு அழகு சேர்ப்பதில் முதன்மையாக நிற்கும் என்று கருதிச் சொல்லப்பட்டது அது. ஏனெனில், ஓர் அறிவார்ந்த சமூகம்தான் நோயிலிருந்து தப்பிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலக நலவாழ்வு நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) தொட்டு, அனைத்து நல அமைப்புகளும், அரசுகளும் நோய் வந்த பின் தீர்ப்பதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை, வருமுன் காத்தலுக்கு அளிப்பதில்லை என்பது வேதனையான ஒன்றாகும்.
சித்த மருத்துவம் என்பது வெறும் மருத்துவத்துறை சார்ந்தது அன்று. அது ஒரு முழுமையான நலவாழ்வியல் ("ஹோலிஸ்டிக் ஹெல்த் கேர்') முறையாகும். ஆனால், வேதனை என்னவென்றால் இதன் அருமையும், பெருமையும் ஆட்சியாளர்கள், உயர் அதிகாரிகள், கொள்கை வகுப்போர் என பலரும் முழுமையாக அறியாதிருப்பதுதான்.
நாளொழுக்கம், காலவொழுக்கம், பிணியணுகாவிதி, உணவியல் நெறிமுறை, வைத்தியம், யோகம், ஞானம் என பல்வேறு கூறுகளை ஆழ அகலமாகக் கொண்டு, தட்பவெப்ப சூழலுக்கேற்ப, இயற்கையோடு இணைந்த நல்வாழ்வை மண்ணின் மைந்தர்களுக்கு வழங்க, சித்தர்கள் வழங்கிய அருட்கொடை சித்த மருத்துவம் என்பதை சமூக அறிஞர்களும், ஆர்வலர்களும்கூட உணராதிருப்பதுதான் நாட்டின் சரிவுக்குக் காரணமானவற்றில் முக்கியமானதாகும்.
காமாலைக்கு மட்டுமல்லாமல், தேய்வு நோய் (எய்ட்ஸ்) தொடங்கி சிக்குன்குனியா, பன்றி காய்ச்சல் என மக்கள் பீதி அடைந்தபோது, அவர்களைக் காக்க நவீன மருத்துவ உலகம் தடுமாறியபோது, அச்சம் நீக்கி மக்கள் நலம் மேம்பட சித்த மருத்துவம் முன்னின்றது.
ஆன்மிகமும், அறிவியலும் அருங்கலவையாக அமைந்திருக்கும் சித்த மருத்துவத்தைக் கற்பிக்கும் கல்வி நிலையங்களின் இன்றைய நிலை வேதனையானதாக அமைந்துள்ளது.
1964-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பழைமையான பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி இன்று முதலாமாண்டு மாணவர்களுக்குக் கதவடைத்து விட்டது. மத்திய அரசின் ஆய்வுக் குழு அறிக்கையின் அடிப்படையில், "ஆயுஷ்' துறை அனுமதியை மறுத்துள்ளது. மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். சட்டம் அதன் கடமையைச் செய்யும் அதேவேளையில் சித்த மருத்துவக் கல்வியைக் காக்க வேண்டியது சமூக ஆர்வலர்களின் தார்மிகக் கடமையாகும்.
பல லட்சம் மருத்துவர்கள் தேவைப்படும் இந்த நாட்டில், பல்வேறு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் சூழலில் பாரம்பரிய மருத்துவம் சார்ந்த கல்லூரி மூடப்படுவது நியாயமாகுமா?
கல்லூரி மூடப்பட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அவற்றை அவரவர் எல்லைக்குட்பட்டு, வாய்ப்பைப் பயன்படுத்திச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாது ஒருவர் மீது ஒருவரை காட்டி பழி போட்டுக்கொள்வது அழகன்று.
படுக்கைகளில் நோயாளிகள் குறைவாக உள்ளனர் என்பது ஒரு காரணம். பரவலாக நாள்பட்ட நோய்களான பக்கவாதம், கீல்வாயு, முள்ளந்தண்டு வாதம், கரப்பான், காளாஞ்சகப்படை, மூலம் என்று பல நோய்க ளுக்கும் சித்த மருத்துவம் நோக்கி மக்கள் விழிப்படைந்து, வந்து கொண்டிருக்கும் சூழலில் படுக்கை நிரப்பப்படாததற்குக் காரணம், துறை சார்ந்த மருத்துவர்களே என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
அரசுப் பணி வாய்ப்பு கிடைத்து, மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் மருத்துவர்களும், அலுவலர்களும் உணர்ந்து தொண்டாற்றி இருந்தால் இந்தக் குறை ஏற்பட்டிருக்காது.
அடுத்து, ஆசிரியப் பெருமக்கள் பற்றாக்குறை, பதவி உயர்வு, பணி மூப்பு, ஊதிய உயர்வு போன்றவை நவீன மருத்துவத் துறையைப் போன்று இந்திய மருத்துவத்துறையில் முறையாக இல்லை. முதுநிலை சித்த மருத்துவம் (எம்.டி) படித்தவர்கள் பல ஆயிரம் பேர் பணியின்றி உள்ளனர். இது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் எப்படி தெரியாமல் போயிற்று? அவர்களுக்கு ஏன் முறையான தேர்ந்தெடுப்பு முறை நடத்தி பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பது புரியவில்லை.
சித்த மருத்துவத்துறையில், உதவி மருத்துவ அலுவலராகப் பணியில் சேரும் ஒருவர் 30 ஆண்டுகள் கழித்து அதே பதவியில் இருந்து ஓய்வுபெறுகிறார். இந்த அவலம் உலகில் வேறு எந்த மருத்துவத் துறையில் நடக்கும்?
விரிவுரையாளராக இருப்பவர் பல காலம் அதே பதவியில் இருக்கிறார். இணை பேராசிரியராகவில்லை. இணை பேராசிரியரானவர், பேராசிரியர் ஆகவில்லை. ஏன் இரண்டு அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளிலும் முறையாக முதல்வர் பதவி நிரப்பப்படாத அவலம், சென்னை மருத்துவக் கல்லூரிக்கோ, கீழ்ப்பாக்கத்துக்கோ, ஸ்டான்லிக்கோ ஏற்படுமா? அரசு அதிகாரிகளின் இந்த பாராமுகம் ஏன் என்றே விளங்கவில்லை?
தகுதி உள்ளோரைக் கண்டறிந்து, பணி அமர்த்தி கல்வி நிலையங்களை நடத்தி பாரம்பரிய மருத்துவத்தைக் காக்க வேண்டியது அரசின் கடமையில்லையா? சீனா முதலான நாடுகளைப் பார்த்தாவது நாம் கற்றுக்கொள்ள வேண்டாமா? 1997-ம் ஆண்டு தமிழக அரசால் இயற்றப்பட்ட சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை; அதாவது, அந்தச் சட்டத்தின் வழி அமைக்கப்பட்ட சித்த மருத்துவ மன்றம் செயலற்றுக் கிடக்கிறது. உறுப்பினர் தேர்தல்கூட நடைபெறவில்லை. இதில் அரசின் மெத்தனம் பலகாலமாக விளங்கவே இல்லை.
வளரும் துறை, வளர்க்கப்பட வேண்டிய மருத்துவத் துறை எனக் கருதி மத்திய அரசின் "ஆயுஷ்' துறையாவது சற்று விதி தளர்த்தி அனுமதி வழங்கி வழிநடத்தக் கூடாதா? கடந்த ஆண்டுகளில் அரசுக்கே திருப்பி அளித்த நிதியை, நலிவடைந்த மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் நிதி வழங்கியாவது காக்க முன்வரக் கூடாதா? மனம் இருந்தால்தானே மார்க்கம் பிறக்க...
வருங்கால மக்களின் நலன் கருதி செயின்ட் ஜார்ஜ் கோட்டையும், தில்லி பட்டணமும் தமிழ் மருத்துவத்தின்பால் தன் பார்வையை வைக்குமா என்பதே உண்மையான சமூக ஆர்வலர்களின் ஏக்கமாக உள்ளது.
அகத்தியரும், திருமூலரும் விதைத்த இந்த பாரம்பரிய மருத்துவப் பயிரை காக்க அரசும், அதிகாரிகளும் முன்வர வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோள்.

(கட்டுரையாளர்: தலைவர் - தமிழ் மருத்துவக் கழகம், சென்னை).
"